கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சமீபத்தில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்தி அதில் "ஓரளவு" வெற்றியும் கண்டு விட்டார்கள்.சமீப காலமாக உண்ணாவிரதம் இருப்பது ஒரு விதமான வாடிக்கை ஆகி விட்டது.சில சமயங்களில் அது வேடிக்கையாக காட்சி அளிக்கிறது.இந்த வாடிக்கை வேடிக்கைகளைப் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.இந்த கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதில் என்ன பிரச்சினை?
1988ஆம் ஆண்டு இந்திய அரசும் ரஷிய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.ஆனால் திடீரென கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த அணு மின் நிலையத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது.அரசியல் கட்சிகள் தம் பங்கிற்கு அப்பகுதி மக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து அவர்களின் போராட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.
இத்தனை நாள் இல்லாத எதிர்ப்பு இப்போது எழுவதற்கு காரணம் என்ன? ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி மக்களை வெகுவாக பாதித்து விட்டதென்றும் அதன் விளைவாகவே இந்த போராட்டங்களும் எதிர்ப்புகளும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர விளைவுகள் நம் மக்களிடையே இப்படி ஒரு பயத்தை உண்டாக்குவது இயல்பு தான்.ஒரு வேளை இங்கும் அது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி எழுவது புரிந்து கொள்ளக் கூடியதே.ஆனால் ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. காரணம் அந்நாட்டின் புவியல் ரீதியான அமைப்பு அப்படி.இங்கு அப்படி இல்லை.
விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் இதனால் பாதிப்பேதும் ஏற்படாது என்று தான் கூறுகிறார்கள்.2001 ஆம் ஆண்டே இந்த அணு மின் நிலையத்தைக் கட்டும் பணிகள் துவங்கி விட்டன.இந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு போராட்டங்களும் எதிர்ப்புகளும் பணிகள் முடிவடையும் நிலையில் கிளம்பி இருப்பது வியப்பாகத் தான் இருக்கிறது. தமிழகம் ஏற்கனவே மின்சார பற்றாக் குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.நானறிந்தவரையில் எந்த ஒரு தேர்தலிலும் மின் வெட்டும் மின்சார தட்டுப்பாடும் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மின் வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்பட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என்ற உறுதிமொழியோடு தான் இந்த அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது.இவர்கள் வந்தால் ஆக்கப்பூர்வமான சில திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று எண்ணி ஒட்டு போட்ட மக்களும் உண்டு.
இது வரையில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த அரசு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எப்போதோ துவங்கிய இந்த அணு மின் நிலையத்தின் பணிகள் சரியாக இப்போது முடிவடையும் நிலையில் உள்ளன.அதையும் நிறுத்த வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆயற்று.நமது மாண்புமிகு முதல்வர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் நோக்கம் உண்மையில் நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் இதே முதல்வர் அவர்கள் தான் சற்று தினங்களுக்கு முன்பு அணு சக்தி விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதாகவும் இந்த அணு மின் நிலையம் சகல பாதுகாப்புகளுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.மேலும் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை எனவும் கூறினார்.அப்படிப்பட்டவர் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது சுத்த அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு வேளை எதிர் கட்சிகளின் வாயை அடைக்க இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றினாரோ என்னவோ.
எதிர்கட்சிகளை அடக்குவதர்காகவா ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு தனிக்குழு அமைத்து இந்த அணு மின் நிலையம் சரியான பாதுகாப்பு வரம்பிற்குள் அமைக்கப்பட்டிருக்கிறதா?இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்படுமே ஆனால் அது எந்த அளவில் இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அந்தக் குழுவிற்கு ஆணை இட்டிருக்க வேண்டும்.அந்த அறிக்கையை பொறுத்தே அணு மின் நிலையம் அமையும் என்றும் மக்களுக்கு பதிப்பு ஏற்படும் எந்த ஒரு காரியத்தையும் அரசு செய்யது என்றும் உறுதி அளித்திருந்தால் இந்த உண்ணாவிரதம்,போராட்டம் எல்லாம் நின்றிருக்கும்.அணு மின் நிலையம் அமைப்பதனால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது என்று அறிக்கை வந்தால் அணு மின் நிலையத்தை செயல்படுவதில் எந்தத் தடையும் இருக்க கூடாது.
அரசு இதைச் செய்யாமல்,குறை கூறுபவர்களை திருப்தி படுத்தும் நோக்கோடு செயல் பட்டிருப்பது ஆட்சேபத்திற்குரியது!!