கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

தீபாவளி - மகிழ்ச்சி பொங்கட்டும் அடுத்தவர் புன்னகையில்



            இந்த வலைப்பூவை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு என்னை முதலில் அறிமுகம் செய்துக்  கொள்கிறேன். என்னை பற்றி பெரிதாய் சொல்வதற்கு ஏதுமில்லை, இருப்பினும் என்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் என் பதிவைப் படிக்க உங்களுக்கு எந்த ஒரு தூண்டுதலும் இருக்காதல்லவா ? பயப்பட வேண்டாம்.  நான் அரசியல்வாதி போல் சினிமாக்காரரை போல் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி பேசும் ஆளாக இருக்க விரும்பவில்லை.  கணினித் துறையில் என்ன வேலைச் செய்கிறோம் என்றே தெரியாமல் வேலை செய்யும் கூட்டத்தில் நானும் ஒருவன்.  அடுத்தவரை கலாய்பதையே  வேலையாய் கொண்டவன். இந்த வலைப்பூவில் எனக்கும் என் பதிவை பதிக்க அனுமதிக்கலாம என்று சற்று யோசித்து பார்த்து அனுமதித்து தான் பார்ப்போம் என்று அனுமதித்த என் நண்பனுக்கு நன்றி. இந்த வலைப்பூவில் எனது முதல் பதிவை எனக்கு மனதில் பட்டதை எழுதுவதற்கு சுதந்திரம் கொடுத்த என் நண்பனுக்கும் மற்றும் சிவகாசியில் வேலை செய்யும் ஏழை எளிய சிறுவர்களுக்கு அர்பணிக்கிறேன்.

             நான் தமிழ்ப் பண்டிகைகளை மிகவும் விரும்பி கொண்டாடுபவன். அதிலும் இந்த தீபாவளித் திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். இதனால் என்னை இறைபக்தி மிகுந்தவன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். எனக்கு பொதுவாகவே அதிக சந்தேகம் எழுவது வழக்கம். தீபாவளி எதற்கு கொண்டாடுகிறார்கள். இந்து மதத்தினர் கிருஷ்ண பகவானும் அவரது மனைவி சத்யபாமா அவர்களும் சேர்ந்து நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை தீபாவளி என கொண்டாடுகிறார்கள். ஜெயின் மதத்தினரை கேட்டால் மோக்ஷம் அடைவதற்கு உகந்த நாளை தீபாவளித் திருநாள் என்கிறார்கள். எது எப்படியோ, புராணம் முக்கியம் இல்லை. நமக்கு தேவைப் புத்த்தாடைகள், சாப்பிடப்  பலகாரம், தொலைகாட்சியில் புதுப்  படங்கள் மற்றும் அடுத்தவர் நிம்மதியையும் அமைதியையும் கெடுக்க பட்டாசுகள். எருமைப் போல் வளர்ந்திருக்கும் எனக்கே இவற்றை கண்டால் பிடிக்கும். சிறுவர்களுக்கு பிடிக்காதா என்ன ?

             எனக்குத் தீபாவளி மீது எந்தக் கோபமும் கிடையாது, கொண்டாடக் கூடாது என்று சொல்லவும் எனக்கு உரிமையோ தகுதியோ கிடையாது. நானே தீபாவளிக் கொண்டாடுவேன், இந்த ஒரு பண்டிகைக்கு மட்டும் தான் சாதி மதம் பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். சந்தோஷம் நிறையும் நாள். அதற்கு மறுபக்கம் இருப்பதை யாரும் உணர்வதில்லை. தீபாவளி என்றால் சிறுவர்களுக்கு முதலில் உதயம் ஆகும் சிந்தனை பட்டாசு. அது எப்படி தயார் ஆகிறது, யார் அதைத் தயாரிகிறார்கள், யார் யார் அதில் சமந்த பட்டிருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். பட்டாசு கொளுத்துவது குற்றம் என்று சொல்லவில்லை. அதே சமயம் இந்தப் பட்டாசு கலாச்சாரம் எப்படி வந்தது என்று சற்று சிந்திக்க வேண்டும். பட்டாசு கொளுத்தினால் தான் தீபாவளியா ? சிறுவர்கள் பட்டாசு கொளுத்துவதை குற்றம் சொல்ல முடியாது ஏனெனெனில் அவர்கள் சிறுவர்கள். ஆனால் பெரியவர்களும், இளைஞர்களும் இதில் பெரும் பங்கு கொள்கிறார்கள் என்பது தான் வருத்தம்.

            வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை பதிவு செய்வது எனக்கு பிடிக்காத ஒன்று. இருப்பினும் நடந்த உண்மையை நடக்கும் சம்பவங்களை உங்கள் முன் நிறுத்தினால் சற்று யோசிக்க மாட்டீர்களா என்ற நப்பாசை தான். உதவும் உள்ளங்கள் என்ற நிறுவனம் உயர் திரு. ஷங்கர் மகாதேவன் அவர்களால் பதினொரு வருடங்களுக்கு  முன் நிறுவப்பட்டு ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அவர் மூலமாக அதனை பற்றி தெரிந்தோர் அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றனர்.காசு மட்டும் கொடுத்து உதவாமல், மக்களுக்கு முக்கியமாக கிராமப்புற மக்களுக்கு, கல்வியின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லும் வகையில் ஒரு குழு ஒன்றை அமைத்தனர். அதில் பெரும்பாலும் இளைஞர்களே. இவர்களது வேலை என்னவென்றால் கிராமப்புறப் பள்ளிகளுக்கு மற்றும் இடங்களுக்கு சென்று கல்வியைப் பற்றி எடுத்துக் கூறுவது தான். இதே வேலையாகத் தான் என் நண்பன் ஒருவன் சிவகாசிக்குச் சென்றிருந்தான். அங்கு அவன் ஒரு குழந்தையிடம் பேசியிருக்கிறான். அக்குழந்தை என்ன தொழில் செய்து கொண்டிருந்தது தெரியுமா ? சங்குசக்கரம் வைக்கும் அட்டைப் பெட்டி செய்யும் வேலை. படிக்கிற வயதில் பிஞ்சு கைகளில் புத்தகம் இருக்க வேண்டிய சிறுக்  கைகளில் என்னவிருக்கிறது பாருங்கள்.  அவளிடம் பேசியப் போது கிடைத்த அதிர்ச்சித் தகவல் என்வென்றால்... ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும், அப்படி செய்தால் நான்கிலிருந்து ஐந்து கிலோ அட்டை செய்யலாம். ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கிடைக்கும். அதாவது ஒரு கிலோ அட்டை செய்தால் நான்கு ருபாய், ஒரு நாளைக்கு இருபது ரூபாய். எட்டு மணி நேர உழைப்புக்கு இருபது ருபாய் சம்பளம்.  என்ன கொடுமை சரவணன் இது!!!!


             

         அந்த சிறுமியின் பெற்றோர்களிடம் கேட்டோம், ஏன் உங்களது பிள்ளையைப் படிக்க வைக்காமல் வேலை செய்ய அனுப்பியிருக்கிறீர்கள் என்று, அதற்கு அவர்கள் தந்த பதில்... "எனக்கு மட்டும் ஆசையா என்ன ? இருநூறு ரூபாய் கொடுத்தால் நானும் என் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறேன்"  என்றனர். அந்த இருநூறு ரூபாய் ஒரு நாளைக்கு அல்ல ஒரு மாதத்திற்கு. நாம் ஒரு வேளை உணவகங்களில் ஒருவருக்கு செலவு செய்யும் காசு. இதை சிந்தியுங்கள். பட்டாசு கொளுத்தக் கூடாது என்பது என் நோக்கமல்ல.பட்டாசு கொளுத்துங்கள் சந்தோஷமாக கொண்டாடுங்கள். அதே சமயம் சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு கடுகளவு. ஆனால் அவர்களுக்கு  அது கடலளவு.  உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் ஆனால் எப்படி செய்வது எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா ? உதவும் உள்ளங்களை நாடுங்கள்.  கருத்து சொல்வது சுலபம், ஆனால் அதன்படி செயல்படுவது கடினம். என்னால் முடிந்த  வரை முயல்கிறேன். 

        தீபாவளித் திருநாளில் சந்தோஷம் நிறையட்டும், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிப் பொங்கட்டும். உங்களது மகிழ்ச்சி அடுத்தவர்களின் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.  சந்தோஷமான மற்றும் பாதுகாப்பான தீபாவளி அமைய எனது வாழ்த்துக்கள்.

உதவும் உள்ளங்கள் 
60/34, சவுத் உஸ்மான் ரோடு, 
நதேள்ள ஜெவேல்லேரி க்கு அருகில்,
சென்னை, இந்தியா - 600017

Udhavum Ullangal
60/34, South Usman Road, 
Next to Nathella Jewellery, 
Chennai, India 600017

இனைய தளம்: http://www.udhavumullangal.org.in
[ மேலும் படிக்க ]

தீபாவளி ஒரு சிந்தனை




நண்பர்களே தீபாவளி நெருங்கி விட்டது.இந்த நேரத்தில் இந்தப் பதிவை வெளியிடுவது தான் உசிதமென்று கருதுகிறேன்.இதை விடுமுறை தினச் சிறப்புப் பதிவு என்று கூட வைத்துக் கொள்ளலாம்(சில பகுத்தறிவு ஊடகங்கள் சமீபகாலமாக அப்படித்தான் விளம்பரப் படுத்துகின்றன).

தீபாவளி என்றாலே இயல்பாகவே அனைவர் மனத்திலும் ஒருவித குதூகலம் குடி கொண்டு விடுகிறது.புத்தாடைகள், பலகாரங்கள்,புதிய திரைப்படங்கள்,'பட்டாசுகள்' என நாடே அமர்க்களப்பட்டுவிடுகிறது.ஆனால் ஒரு விஷயம். தீபாவளியப் பற்றிய நமது புரிதல் சரி தானா?நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற தினத்தையே தீபாவளி என்று இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.இந்தப் பண்டிகையன்று வீடு முழுக்க விளக்கேற்றிக் கொண்டாடுவது மரபு. தீபாவளி அன்று நம் காது கிழியும் அளவுச் சத்தங்கள் கேட்கும்.யானை வெடி,பிஜிலி பட்டாசு,செவென் ஷாட்,டபுள் ஷாட்,ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா சரங்கள்,ராக்கெட்டுகள் என பல விதப் பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாடுகிறார்கள். இரவு நேரங்களில் சங்கு சக்கரம்,புஸ் வானம்,மத்தாப்புக்கள் என வெளிச்சம் தரும் பட்டாசுகள் வெடிக்கப் படுகின்றன.

ஆனால் பட்டாசு வெடித்தே இந்தப் பண்டிகைக் கொண்டாட வேண்டுமென்பதில்லை.இந்த தீபாவளி என்பது என்ன? 
தீபஒளி.தீபம் + ஒளி = தீபாவளி.ஆக,இதை விளக்குத் திருவிழா என்று பொருள் கொள்ளலாம்.ஆனால்,இன்று நாட்டில் இதை சப்தங்களின் திருவிழாவாகத் தான் கொண்டாடுகிறார்களே தவிர,விளக்குத் திருவிழாவாக கொண்டாடுவதில்லை. குடிசை நிறைந்த பகுதிகளில் விடப்படும் ராக்கெட்டுகளால் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. டிரான்ஸ்போர்மேர்களில் இந்தப் பட்டாசுகள் பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது.திரியைக் கில்லி பட்டாசு கொளுத்தி விட்டு வரும் சிறுவர்கள்,இளைஞர்கள் அதே கையுடன்(கை கழுவாமல்) பலகாரம் சாப்பிடுகிறார்கள்(அனைவரும் இப்படிச் செய்வதில்லை என்றாலும்,ஒரு சிலர் இதைச் செய்கிறார்கள்).இதனால் பல விதமான வியாதிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது.

சரி.இந்தப் பட்டாசுத் தான் எங்கிருந்து வருகின்றது?இதைத் தயாரிப்பவர்கள் தான் யார்?கீழே உள்ளப் படத்தைப் பாருங்கள்.இந்தப் பட்டாசுகள் சிவகாசியிலிருந்துத் தயாராகின்றன.சீருடை அணிந்துப் பள்ளிக்குச் சென்று புத்தகத்தையும் எழுதுகோலையும் பிடிக்க வேண்டிய கைகள் வெடிமருந்தைப் பிடித்துள்ளன.இந்தச் சிறுவர்களின் எதிர்காலத்தை இருளாக்கித் தான் ஒளி வீசும் இந்த மத்தாப்புக்கள் செய்யப்படுகின்றன.

இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என்னவென்றால் வறுமையில் வாடும் இந்த சிறுவர்களுக்குக் கல்வியப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில சமூக சேவை புரியும் இயக்கங்களைக் கொண்டு இதைச் செய்யலாம். இது போல சிறுவர்களை பணிக்கமர்த்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வழி செய்யலாம்.ஆனால் இவை அனைத்துக்கும் சரியான திட்டமிடுதல் வேண்டும் மற்றும் இதைச் செயல்படுத்த அவகாசமும் வேண்டும்.நம்மளவில் உடனடியாக என்ன செய்ய இயலும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

நான் முன்பு குறிப்பிட்டதைப் போல இது தீபங்களின் பண்டிகை தான்.சப்தத்தின் பண்டிகை அல்ல.இது போல பல சிறுவர்களின் வாழ்வை அழித்து செய்யப்படும் பட்டாசுக்களை நாம் பணம் கொடுத்து வாங்கி வெடிக்கத்தான் வேண்டுமா? இந்த வெடிச் சத்தங்கள் இதய நோயாளிகளின் உயிருக்கே உலை வைக்கும் திறன் கொண்டவை. பலவித ஆபத்துகளையும் விளைவிக்கவல்ல இந்த வெடிகளையும் மத்தாப்புக்களையும் நாம் கொளுத்தத் தான் வேண்டுமா?சிந்தியுங்கள் தோழர்களே.



இப்படிப் பட்டாசுகளுக்கெதிராக நான் எழுதுவதால் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்றோ அல்லது இந்து மதம் மீது துவேஷம் கொண்டவன் என்றோ கருத வேண்டாம்.எனது மற்றொரு வலைப்பூவான(http://dream---life.blogspot.com) ஐ தொடர்ந்துப் படித்தவர்கள்/படிப்பவர்கள் அவ்வாறு கருத வாய்ப்பில்லை. நான் ஒன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறிவைத்து இப்படியெல்லாம் எழுதவில்லை.இந்த வலைப்பூவைப் படிப்பவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களாகத் தான் இருக்க முடியும்.இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானோர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான். இன்றும் பலர் பட்டாசு வெடிப்பதில் ஏக ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர், இந்தப் பதிவைப் படித்தப் பிறகு இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் கூட அது நமக்கொரு வெற்றி தான். 

நான் ஒருவன் இதை எழுதுவதால் தமிழகத்தில் உள்ள அனைவரும் பட்டாசுக்களைப் புறக்கணித்துவிடப் போவதில்லை. ஆனால் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்.நாம் ஏன் அந்த ஆரம்பமாக இருக்கக் கூடாது?இதன் காரணமாகவே நான் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிப்பதில்லை. சிந்தியுங்கள்.....

தீபஒளித் திருநாள் அன்று இல்லங்களில் தீபம் ஏற்றுவோம்.நம் வாழ்விளிருக்கும் இருள் விலகி ஒளிமயமான எதிர்காலம் அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துக்கள்!!!!!

[ மேலும் படிக்க ]