கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

தொடரும் கூடங்குளம் போராட்டம் - சில தகவல்கள்




நண்பர்களே நான் முன்பே ஒரு முறை இந்த வலைப்பூவில் கூடங்குளம் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதினேன்.அப்போதே இந்த போராட்டத்தின் மீது எனக்கிருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்.இந்த போராட்டக்காரர்கள் ஏதோ உள்நோக்குடன் செயல்படுகிறார்கள் என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தினேன். சமீப காலாமாக சில கட்டுரைகளைப் படித்தும்,போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளைக் கவனித்தும் வந்த பிறகு தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கூடங்குளம் போராட்டத்தின் நூறாவது நாள் என புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒரு செய்தி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.வர்த்தக ரீதியாக தோல்வியடைந்த சில திரைப்படங்கள் நூறாவது நாள் விழ கொண்டடுவதைப் போல்,அர்த்தமற்ற இந்த போராட்டமும் நூறு நாட்களுக்கும் மேல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

நிபுணர் குழு ஒன்றை அரசு நியமித்து இந்த அணு மின் நிலையத்தின் நிறை குறைகளை குறித்த நேர்மையான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட வேண்டுமென்று நமது முந்தைய கட்டுரையில் தெரிவித்திருந்தோம். ஆனால் மாநில அரசைத் தான் விமர்சனம் செய்திருந்தோம்.இப்போது மத்திய அரசு ஒரு படி மேலே போய் நிபுணர் குழு ஒன்றை நியமித்து அவர்களைக் கூடங்குளத்துக்கே  அனுப்பி மக்களின் கேள்விகளுக்கு விடயளிக்கும்படி செய்துள்ளது.ஆனால் எந்த விளக்கமளித்தாலும் திருப்தி அளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறி வருகிறார்கள்.

அப்துல் கலாம் போன்ற கற்றறிந்த விஞ்ஞானிகள் உத்திரவாதமளித்த பிறகும் கூட இவர்கள் திருப்தி அடையவில்லை என்று கூறுவது ஒன்றைத் தான் உணர்த்துகிறது.இந்த போராட்டக் குழு செய்வது விதண்டாவாதம் என்பது தான் அது. உதயகுமார் மற்றும் அவரை ஆதரிக்கும் ஒரு கூட்டம் அப்துல் கலாம் அவர்கள் ஒன்று அணு சக்தி விஞ்ஞானி இல்லையே அவருக்கு எப்படி இந்த அணு உலை பாதுகாப்பானதா இல்லையா என்று தெரியும் என கேட்கிறார்கள். அப்படியானால் இந்த போராட்டத்திற்கு தன்னைத் தானே தலைவன் என்று அறிவித்துக் கொண்டுள்ள உதயகுமார் என்பவர் யார்? அவர் என்ன அணு சக்தி விஞ்ஞானியா அல்லது வேறு என்ன விஞ்ஞானி?

இந்த போராட்டத்தில் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்களின் பெயர்களைப் பார்ப்போம்.உதயகுமார், புஷ்பராயன் மற்றும் மைபா ஜேசுராஜன்.இதில் புஷ்பராயன் என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து இல்லற வாழ்க்கைக்கு வந்தவர்.ஜேசுராஜன் என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார்(செய்தி : நவம்பர் 24,தினமலர்).சரி இந்த உதயகுமார் என்பவரைப் பற்றியும் சில தகவல்களை பார்ப்போம்.உதயகுமார் தற்போது இடிந்தகரையில் ஜெயகுமார் எனும் பாதிரியாருடன் தங்கி வருகிறார்.அந்த பாதிரியார் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பவர்(இவை ஊடகங்களில் வந்த செய்தி).இந்த உதயகுமார் அமெரிக்காவில் ஹிந்து மதத்தை விமர்சித்து/எதிர்த்து புத்தகங்களை எழுதியவர்.இவர் ஒரு மதமாற்றம் செய்யப்பட கிறிஸ்தவர் என்று கூறுகிறது விக்கிப்பிடியா இணைப்பு (http://en.wikipedia.org/wiki/S._P._Udayakumar).இப்படி முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதன் நோக்கமென்ன?கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன. இது போன்ற விஷயங்களில் பாதிரியார்களும் தேவாலயங்களும் பங்கு கொள்வது ஏன்? உண்மையைச் சொன்னாள் இவர்கள் பங்கு கொள்ளவில்லை இவர்கள் தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டு இன்றளவும் அது தொடர காரணமாய் இருக்கிறார்கள்.

இவர்கள் இந்தப் போராட்டத்தை இத்தனை நாட்கள் நடத்துவதற்கு போதுமான நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது? சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பணப் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது.அப்படிப் பட்ட போராட்டத்தையே தொடர்ந்து நடத்த இயலவில்லை,ஆகா இந்த கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

இந்தியாவில் உள்ள 22 அணு உலைகளில் Nuclear Suppliers Group(NSG) என்றழைக்கப்படும் சர்வதேச அமைப்பின் மேற்பார்வைக்கு உட்பட்டது. மீதமிருக்கும் 8 உலைகளுள் இந்த கூடங்குளம் அணு உலையும் ஒன்று. மேலும் இந்த அணு உலைப் பொறுத்த வரையில் நமது வர்த்தகம் முழுவதும் ரஷிய நாட்டுடன் தானே தவிர அமெரிக்காவுடன் இல்லை.(17 நவம்பர் தினமணி மற்றும் 15 நவம்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் குருமூர்த்தி அவர்களின் கட்டுரையைப் படிக்கவும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் : http://expressbuzz.com/biography/Forces-halting-our-n-surge/333225.html

இதில் மற்றொன்றை நாம் கவனிக்க வேண்டும்.மத்திய அரசு இந்த நிபுணர் குழுவை நியமித்ததன் காரணம் என்ன? அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்பதற்காகத் தான் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு போராடுபவர்கள் மத்திய அரசிடமிருந்து தங்கள் சந்தேகங்களைக் கேட்க போராடவில்லை.அவர்கள் போராட்டமே இந்த உலையே கூடாது என்பதற்காகத் தான்.அதி புத்திசாலித்தனமாக நிபுணர்களை மடக்குவதாக நினைத்து அவர்கள் கேட்கும் சில கேள்விகளை பார்ப்போம்.

நாட்டின் பாதுகாப்பு, ரகசிய விவரங்கள் சார்ந்த கேள்விகள்
1. அணு உலை அமைந்துள்ள இடம்
2. அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்
3. அணு உலையின் செயல்திறன் அறிக்கை
4. எரிபொருள் நிரப்புவது எப்படி?
5. யுரேனிய எரிபொருள் வாங்கும் முறை; எங்கிருந்து வாங்கப்படுகிறது
6. எரிபொருட்களை கொண்டு வரும் பாதைகள் மற்றும் போக்குவரத்து குறித்த விவரம்
7. தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது. அதன் பாதைகள் குறித்த விவரம்
8. அணு கழிவுகள் அகற்றுதல் மற்றும் கையாளும் தொழில்நுட்பம்
9. அணு மறு சுழற்சி குறித்த விவரம்
10. அணு மறு சுழற்சி நிலையம் குறித்த விவரம்
11. குளிர்நீர் வெளியேற்றும் தொழில்நுட்பம்
12. மன்னார் வளைகுடா பகுதிக்கான பாதுகாப்பு
13.மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கான பாதுகாப்பு
14.பயங்கரவாத அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கை
15. இத்திட்டத்தால், சீனா, இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான நட்புறவு மாற்றம் குறித்த விவரம்
16. எரிபொருளுக்கான கனிம சுரங்கங்கள், அதை தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள்
17. ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்
18. ராணுவ கண்காணிப்பு விவரம்
19. அணு உலையின் தொழில்நுட்ப விவரம்
மற்றும் அதற்கான மொத்த செலவு விவரம்
20. கடல் பாதுகாப்பை பலப்படுத்துவது எப்படி?
21. கடல் வழி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விவரம்
22. ராணுவம் பணியமர்த்தப்படும் பகுதிகள் எவை?
23. மீதமுள்ள நான்கு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்த விவரம்
24. அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடையேயான ஒப்பந்த விவரம்
25. ஆயுதங்கள் தயாரிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள்

"அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்","ராணுவ கண்காணிப்பு விவரம்","ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்" இத்யாதி போன்ற கேளிவிகள் எல்லாம் இவர்களுக்கேதற்கு. மேலும் அதிர்ச்சி தரும் ஒரு தகவலையும் மத்திய குழுவின் தலைவர் திரு.முத்துநாயகம் வெளியிட்டிருக்கிறார்.அதாவது போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணு உலை குறித்த வரைபடத்தைக் கேட்கிறார்கள் என்பது தான் அது( இந்த இணைப்பைப் படியுங்கள் : http://tamil.oneindia.in/news/2011/11/18/koodankulam-plant-is-extremely-safe-expert-team-aid0128.html). இது எல்லாம் இவர்களுக்கெதற்கு? இதை இவர்கள் அந்நிய நாட்டிற்கு விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மூலமாக அந்நிய நாட்டவர்கள் இந்த அணு உலை முடக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் நமக்குத் தோன்றும் கருத்து.

கல்பாக்கம்,தாராபூர்,கார்வார் போன்ற இடங்களில் அணு மின் நிலையங்கள் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. போபால் சம்பவத்தை இந்த அணு மின் நிலையத்துடன் ஒப்பிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வடிவமைப்பு அமெரிக்கத் தரத்துக்கு இல்லை என்பது அதை அனுமதிக்கும் முன்பே அரசுக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் வேரன் ஆண்டர்சன்னுக்கும் முன்பே தெரியும் என்று செய்திகள் கூறுகின்றன .மேலும் விஷவாயு சிறிய அளவில் வெளியேறத் தொடங்கியபோதே கொடுக்கப் பட்ட எச்சரிக்கையினை அலட்சியம் செய்து விட்டது அப்போது இருந்த அரசு.மேலும் அந்த நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு இத்தனை ஆராய்ச்சிகளும் இவ்வளவு நிபுணர்களும் விளக்கமோ உத்திரவாதமோ வழங்கவில்லை.கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் தொழில்நுட்பம் எப்படி என்றால்,சுனாமியோ அல்லது பூகம்பமோ ஏற்பட்டால் அணு உலை தானே நின்று விடும்.அதனால்(அணு உலையினால்) எந்த பாதிப்பும் ஏற்படாது.மக்கள் அச்சப்படும் பொதுவான விஷயமான கதிர்வீச்சுத் தாக்குதல்களும் ஏற்படாமல் இருக்கும்படித் தான் இந்த அணு உலை அமைந்துள்ளதாக நிபுணர் குழு தெரிவிக்கிறது.

எந்தக் கதிர்வீச்சும் வெளிவரப் போவதில்லை..எரிபொருள் நிரப்பப்படும் யூனிட்டே பல அடுக்கு பாதுகாப்பில் தான் வைக்கப்பட்டுள்ளது.இதையும் தாண்டி அந்த உலையில் உட்புரச்சுவர் ஆறு மில்லி மீட்டர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட்டுக்களால் கவர் செய்யப்பட்டுள்ளது.அதற்கும் வெளியே நான்கு அடி கான்க்ரீட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட பின்பும்,இதை விளக்கிய பிறகும் கூட ஆர்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடுவது,இந்த உலை எப்படியாவது செயல்படாமல் தடுத்து விட வேண்டுமென்கிற அவர்களது என்னத்தைத்தான் காட்டுகிறது.



அப்துல் கலாம் அவர்கள் பார்வையிட்டு,இது பாதுகாப்பான உலை என்று கருத்துத் தெரிவித்தப் பிறகு,உதயகுமார் புதிய தலைமுறையில் பேட்டிக் கொடுத்தார்.மத்திய அரசு போலி விஞ்ஞானிகளை வைத்துத் தங்கள் போராட்டத்தை முடக்கப் பார்க்கிறதென்று.அவர் அப்துல் கலாம் அவர்களை நேரடியாகச் சொல்லவில்லை.இந்த அணு மின் நிலையத்தை ஆதரிப்போர் அனைவரும் போலி விஞ்ஞானி என்று எண்ணிச் சொன்னாரோ என்னவோ.வந்தவர்கள் எல்லாம்(கலாம் அய்யா உட்பட)போலி விஞ்ஞானிகள் என்றால்,யார் தான் உண்மை விஞ்ஞானி? உதயகுமார் தானோ? இந்த போராட்டத்திலும் விளம்பரம் தேடிக்கொள்ள வழக்கம் போல புறப்பட்டு விட்டார்கள் திருமாவளவனும் வைகோவும்.மருத்துவர் அய்யா திரு ராமாதாசு அவர்கள் ஒரு படி மேலே சென்று கல்பாக்கம் அணு மின் நிலையத்தையே மூட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார். இவர்கள் இப்படித்தான்,விடுங்கள் இவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய பிறகொரு நகைச்சுவைப் பதிவு எழுதுகிறேன்.

நண்பர்களே,நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கையோ அல்லது தொலைக்காட்சி செய்தியையோ பார்த்து விட்டு இந்தக் கட்டுரையை எழுதவில்லை.சில பத்திரிக்கைகள்,சில தொலைக்காட்சி செய்திகள்,சில நிபுணர்களின் விளக்கங்கள்,சில அறிஞர்களின் கட்டுரைகள் போன்றவற்றஎல்லாம் படித்து விட்டுத் தான் இதை எழுதுகிறேன். நான் படித்தவற்றுள் சிலவற்றுக்கான இணைப்பை இந்த கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் இந்தக் கட்டுரையை எழுதுவதால் எனக்கு தனிப்பட்ட லாபமென்று எதுவுமில்லை. ஆனால் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பாதிரியார்களுக்கும் நேற்று முளைத்தத் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பல விதத்திலும் லாபம் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதை விட முக்கியம் இந்த அணு உலை மூடப்பட்டால் நமக்கு பலத்த நஷ்டம் ஏற்படப் போவது நிச்சயம்.நான் இந்த அணு மின் நிலையத்தை கட்டுவதற்காக செலவிடப் பட்ட பணத்தைச் சொல்லவில்லை.இந்த அணு மின் நிலையத்தின் மூலம் நமக்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இது மூடப்பட்டால் அது நமக்கு கிடைக்காது. மேலும் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவது தேசத்துரோகமாகும்.இந்தப் போராட்டக்காரர்களையும் இவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.அணு உலை விரைவில் செயல்படத் தொடங்க வேண்டும்.இது தான் நமது கருத்து.
[ மேலும் படிக்க ]

அழிவுக்கு அறிகுறி



சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பலரும் விமர்சிக்கிறார்கள்.ஆனால் இது தனது அரசாங்கத்துக்கு அவ பெயர் ஏற்படுத்த வேண்டுமென்று முதல்வரே முனைந்து எடுத்த முடிவு போல தோன்றுகிறது.இல்லையெனில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்வாரா?இந்த இடமாற்றத்தை விமர்சிப்பவர்களின் வாயடைக்க இந்த கட்டடத்தை,சிறப்பு வசதிகள் கொண்ட குழந்தைகள் மருத்துவமனை அமைக்க பயன்படுத்துவோம் என்று அறிவித்து விட்டார்.

நேற்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் விவாதிப்பதைப் பார்த்தேன்.அவரால் சரளமாகப் பேசக் கூட முடியவில்லை.அவரது பேச்சாற்றலைக் குறை சொல்லவில்லை,இந்த விஷயத்தில் அம்மையாரின் இந்த உத்தரவைப் பலமாக ஆதரிக்கக்கூட முடியாமல் தினரியதைத்தான் குறிப்பிட்டேன். இந்த உத்தரவுக்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நூலகம் இருக்கக் கூடாது. இந்த நூலகம் வரலாற்றுப் புகழ் பெற்ற நூலகமாக மாறினால் அதைத் திறந்தவர் கலைஞர் என்பதையும் வரலாறு சொல்லும் . அதைத் தடுக்க ஒரே வழி 'இந்த' நூலகத்தையே அகற்றி விடுவது தான்.

 "நாங்கள் நூலகத்தை ஒரே அடியாக மூடிவிடவில்லை இடமாற்றம் தான் செய்திருக்கிறோம்,குழந்தைகள் மருத்துவமனை வருவதை ஏன் எதிர்க்கிறீர்கள்? அதில் என்ன தவறு?" என்று ஆளும் கட்சியினர் சிலரும்,அரசை ஆதரிக்கும் சிலரும் கேட்கிறார்கள். குழந்தைகள் மருத்துவமனை வருவதை யாரும் எதிர்க்கவில்லை.ஏன் மருத்துவமனையைக் கட்டச் சென்னையில் வேறு இடமே இல்லையா?தமிழகத்தில் வேறு எங்கும் இந்த மருத்துவமனையைக் கட்ட முடியாதா?கலைஞர் திறந்து வைத்த நூலகத்தைத் தான் மருத்துவமனையாக மாற்ற வேண்டுமா?

சரி சுமார் 200 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்டக் கட்டடத்தை வீணாக்கக்கூடாது என்று மருத்துவமனைக் கட்டப் போவதாக அறிவித்துள்ளார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்.மருத்துவமனைக் கட்ட இந்தக் கட்டட அமைப்புச் சரியாக இருக்குமா?அதற்கு மேலும் பல நூறு கோடிகள் செலவாகாதா?அப்படிச் செலவு செய்தால் கூட எந்த பாதிப்புமின்றி மருத்துவமனைக் கட்டிவிட முடியுமா?ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.இவர்கள் சொல்கிறபடி இடமாற்றம் செய்கிரார்களென்றே  வைத்துக்கொள்ளலாம். அத்தனைப் புத்தகங்களும் தவறாமல் இடமாற்றம் செய்யப்படுமா?இந்த நூலகத்தில் இருந்ததைப் போல அவை தலைப்புக்கேற்றவாறு ஒழுங்கு படுத்தி வைக்கப்படுமா? இவை அத்தனையும் செய்ய காலதாமதமாகாதா?இதனால் இந்த நூலகத்தை வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்குத் தான் பாதிப்பு.

நூலகம் என்பது ஏதோ பழைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும் அருங்காட்சியகம் அல்ல.கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பல தகவல்களைப் பல்வேறு புத்தகங்களிலிருந்தும் திரட்ட நூலகமே சிறந்த இடம். ஓரளவுக்கு அனைத்துத் தனியார் கல்லூரிகளிலும் ஒரு சிறப்பான நூலகம் இருக்குமென்றே வைத்துக் கொண்டாலும் கூட,அனைத்துப் பள்ளி,கல்லூரிகளிலும் சிறப்பான நூலகங்கள் பரமாரிக்கப் படுவதில்லை.மாணவர்களுக்கென்றே இல்லை,படிக்கும் பழக்கம் கொண்ட அனைவருக்கும் நூலகங்கள் ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். என் தனிப்பட்டக் கருத்து என்னவென்றால் இன்னும் பல நூலகங்கள் அமைக்கப் பட வேண்டும்.ஒரு கன்னிமாரா மட்டுமே போதாது.அப்படி இருக்க, இருக்கிற நூலகத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக இடமாற்றம் செய்வது கண்டிக்கத்தக்க செயல்.

முதலில் தலைமைச் செயலகத்தை மாற்றினார்கள்.அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.கட்டடம் முழுமையாகக் கட்டப்படாத நிலையில் அதைத் தலைமைச் செயலகமாக முந்தைய ஆட்சியில் மாற்றியது தவறு தான்.அந்தக் கட்டடத்தை ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனைக் கட்டப் பயன்படுத்துவோம் என முதல்வர் அறிவித்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்குவது சாத்தியம் தானா என்பது கேள்விக்குறி தான்.அதற்கு மிக அருகில் ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதும் நினைவிருக்கலாம்.அப்படி இருக்க அந்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனயேச் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.ஆனாலும் இவை சமாளிக்ககூடியப் பிரச்சினைகள் தான் என்று வைத்துக் கொள்வோம்.

இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டக் கட்டடம் அதனால் முதல்வர் தலைமைச்செயலகத்தை மீண்டும் கோட்டைக்கே மாற்றி விட்டார் என்று விமர்சித்தவர்கள் பட்டியலைச் சேர்ந்தவனல்ல நான்.அவரின் அந்த நடவடிக்கைக்கு அரசு தரப்பில் கூறப்பட்டக் காரணங்களை ஆராய்ந்து அரசின் முடிவுக்கு ஆதரவு தான் தெரிவித்தேன்.ஆனால் தொடர்ச்சியாக இது போன்ற நடவடிக்கைகள்,சரியான காரணமில்லாமல் எடுக்கப்படுவது கண்டனத்திற்குரியது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைத் தூசி தட்டி சில மாறுதல்களைச் செய்து வேறு பெயரில் அமல்படுத்துகிரார்கள்.கலைஞர் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி அளித்து அரசின் கஜானாவைக் காலி செய்து விட்டார் என்று சிலர் கேலிப் பேசினர்.அந்தத் திட்டம் நிறுத்தப் பட்டது. அதற்குப் பதில் 'மக்களின் பொருளாதாரத்தரம் உயர்வதற்காக" மடிக் கணினி,மின்னம்மி,மின்விசிறி இத்யாதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இப்படியே கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது அனைத்தையும் மாற்ற வேண்டுமென்று முதல்வர் நினைத்தால்,பிறகு அவருக்கு இப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."என் மனைவியைக் கலைஞர் ஆட்சியில் கட்டினேன்,இப்போது அம்மா ஆட்சி வந்து விட்டது அதனால் மாற்றி விடுங்கள்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் படலாம்.(இந்தக் கோரிக்கைச் சமூக வலைப்பின்னல்களிலிருந்துச் சுடப்பட்டது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை மாற்றும் இந்த நடவடிக்கையையும் நீதிமன்றம் ரத்து செய்யும் என்று தான் நினைக்கிறேன்.

தெரிந்தோ தெரியாமலோ கலைஞர் அவர்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்து வைத்தார்.அவரே எப்போதோ ஒருமுறை தான் இது போல ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்கிறார்.அதையும் இந்த அம்மையார் கெடுத்து விடுகிறார்.முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கைகள்,அமல்படுத்தப்பட்ட நல்ல சட்டங்களை ரத்து செய்வதென்பது தமிழகத்துக்கு ஒரு சாபக்கேடு.கலைஞரின் ஆட்சியில் திறக்கப்பட்ட நூலகமாக இருந்தால் என்ன? அதை இடமாற்றம் செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் முதல்வர் அவர்கள்? இது போன்ற நடவடிக்கைகள்,இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.இது போன்ற நடவடிக்கைகள் தொடருமென்றால் அது அழிவுக்கு அறிகுறி.

[ மேலும் படிக்க ]

தீபாவளி - மகிழ்ச்சி பொங்கட்டும் அடுத்தவர் புன்னகையில்



            இந்த வலைப்பூவை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு என்னை முதலில் அறிமுகம் செய்துக்  கொள்கிறேன். என்னை பற்றி பெரிதாய் சொல்வதற்கு ஏதுமில்லை, இருப்பினும் என்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் என் பதிவைப் படிக்க உங்களுக்கு எந்த ஒரு தூண்டுதலும் இருக்காதல்லவா ? பயப்பட வேண்டாம்.  நான் அரசியல்வாதி போல் சினிமாக்காரரை போல் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி பேசும் ஆளாக இருக்க விரும்பவில்லை.  கணினித் துறையில் என்ன வேலைச் செய்கிறோம் என்றே தெரியாமல் வேலை செய்யும் கூட்டத்தில் நானும் ஒருவன்.  அடுத்தவரை கலாய்பதையே  வேலையாய் கொண்டவன். இந்த வலைப்பூவில் எனக்கும் என் பதிவை பதிக்க அனுமதிக்கலாம என்று சற்று யோசித்து பார்த்து அனுமதித்து தான் பார்ப்போம் என்று அனுமதித்த என் நண்பனுக்கு நன்றி. இந்த வலைப்பூவில் எனது முதல் பதிவை எனக்கு மனதில் பட்டதை எழுதுவதற்கு சுதந்திரம் கொடுத்த என் நண்பனுக்கும் மற்றும் சிவகாசியில் வேலை செய்யும் ஏழை எளிய சிறுவர்களுக்கு அர்பணிக்கிறேன்.

             நான் தமிழ்ப் பண்டிகைகளை மிகவும் விரும்பி கொண்டாடுபவன். அதிலும் இந்த தீபாவளித் திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். இதனால் என்னை இறைபக்தி மிகுந்தவன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். எனக்கு பொதுவாகவே அதிக சந்தேகம் எழுவது வழக்கம். தீபாவளி எதற்கு கொண்டாடுகிறார்கள். இந்து மதத்தினர் கிருஷ்ண பகவானும் அவரது மனைவி சத்யபாமா அவர்களும் சேர்ந்து நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை தீபாவளி என கொண்டாடுகிறார்கள். ஜெயின் மதத்தினரை கேட்டால் மோக்ஷம் அடைவதற்கு உகந்த நாளை தீபாவளித் திருநாள் என்கிறார்கள். எது எப்படியோ, புராணம் முக்கியம் இல்லை. நமக்கு தேவைப் புத்த்தாடைகள், சாப்பிடப்  பலகாரம், தொலைகாட்சியில் புதுப்  படங்கள் மற்றும் அடுத்தவர் நிம்மதியையும் அமைதியையும் கெடுக்க பட்டாசுகள். எருமைப் போல் வளர்ந்திருக்கும் எனக்கே இவற்றை கண்டால் பிடிக்கும். சிறுவர்களுக்கு பிடிக்காதா என்ன ?

             எனக்குத் தீபாவளி மீது எந்தக் கோபமும் கிடையாது, கொண்டாடக் கூடாது என்று சொல்லவும் எனக்கு உரிமையோ தகுதியோ கிடையாது. நானே தீபாவளிக் கொண்டாடுவேன், இந்த ஒரு பண்டிகைக்கு மட்டும் தான் சாதி மதம் பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். சந்தோஷம் நிறையும் நாள். அதற்கு மறுபக்கம் இருப்பதை யாரும் உணர்வதில்லை. தீபாவளி என்றால் சிறுவர்களுக்கு முதலில் உதயம் ஆகும் சிந்தனை பட்டாசு. அது எப்படி தயார் ஆகிறது, யார் அதைத் தயாரிகிறார்கள், யார் யார் அதில் சமந்த பட்டிருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். பட்டாசு கொளுத்துவது குற்றம் என்று சொல்லவில்லை. அதே சமயம் இந்தப் பட்டாசு கலாச்சாரம் எப்படி வந்தது என்று சற்று சிந்திக்க வேண்டும். பட்டாசு கொளுத்தினால் தான் தீபாவளியா ? சிறுவர்கள் பட்டாசு கொளுத்துவதை குற்றம் சொல்ல முடியாது ஏனெனெனில் அவர்கள் சிறுவர்கள். ஆனால் பெரியவர்களும், இளைஞர்களும் இதில் பெரும் பங்கு கொள்கிறார்கள் என்பது தான் வருத்தம்.

            வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை பதிவு செய்வது எனக்கு பிடிக்காத ஒன்று. இருப்பினும் நடந்த உண்மையை நடக்கும் சம்பவங்களை உங்கள் முன் நிறுத்தினால் சற்று யோசிக்க மாட்டீர்களா என்ற நப்பாசை தான். உதவும் உள்ளங்கள் என்ற நிறுவனம் உயர் திரு. ஷங்கர் மகாதேவன் அவர்களால் பதினொரு வருடங்களுக்கு  முன் நிறுவப்பட்டு ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அவர் மூலமாக அதனை பற்றி தெரிந்தோர் அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றனர்.காசு மட்டும் கொடுத்து உதவாமல், மக்களுக்கு முக்கியமாக கிராமப்புற மக்களுக்கு, கல்வியின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லும் வகையில் ஒரு குழு ஒன்றை அமைத்தனர். அதில் பெரும்பாலும் இளைஞர்களே. இவர்களது வேலை என்னவென்றால் கிராமப்புறப் பள்ளிகளுக்கு மற்றும் இடங்களுக்கு சென்று கல்வியைப் பற்றி எடுத்துக் கூறுவது தான். இதே வேலையாகத் தான் என் நண்பன் ஒருவன் சிவகாசிக்குச் சென்றிருந்தான். அங்கு அவன் ஒரு குழந்தையிடம் பேசியிருக்கிறான். அக்குழந்தை என்ன தொழில் செய்து கொண்டிருந்தது தெரியுமா ? சங்குசக்கரம் வைக்கும் அட்டைப் பெட்டி செய்யும் வேலை. படிக்கிற வயதில் பிஞ்சு கைகளில் புத்தகம் இருக்க வேண்டிய சிறுக்  கைகளில் என்னவிருக்கிறது பாருங்கள்.  அவளிடம் பேசியப் போது கிடைத்த அதிர்ச்சித் தகவல் என்வென்றால்... ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும், அப்படி செய்தால் நான்கிலிருந்து ஐந்து கிலோ அட்டை செய்யலாம். ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கிடைக்கும். அதாவது ஒரு கிலோ அட்டை செய்தால் நான்கு ருபாய், ஒரு நாளைக்கு இருபது ரூபாய். எட்டு மணி நேர உழைப்புக்கு இருபது ருபாய் சம்பளம்.  என்ன கொடுமை சரவணன் இது!!!!


             

         அந்த சிறுமியின் பெற்றோர்களிடம் கேட்டோம், ஏன் உங்களது பிள்ளையைப் படிக்க வைக்காமல் வேலை செய்ய அனுப்பியிருக்கிறீர்கள் என்று, அதற்கு அவர்கள் தந்த பதில்... "எனக்கு மட்டும் ஆசையா என்ன ? இருநூறு ரூபாய் கொடுத்தால் நானும் என் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறேன்"  என்றனர். அந்த இருநூறு ரூபாய் ஒரு நாளைக்கு அல்ல ஒரு மாதத்திற்கு. நாம் ஒரு வேளை உணவகங்களில் ஒருவருக்கு செலவு செய்யும் காசு. இதை சிந்தியுங்கள். பட்டாசு கொளுத்தக் கூடாது என்பது என் நோக்கமல்ல.பட்டாசு கொளுத்துங்கள் சந்தோஷமாக கொண்டாடுங்கள். அதே சமயம் சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு கடுகளவு. ஆனால் அவர்களுக்கு  அது கடலளவு.  உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் ஆனால் எப்படி செய்வது எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா ? உதவும் உள்ளங்களை நாடுங்கள்.  கருத்து சொல்வது சுலபம், ஆனால் அதன்படி செயல்படுவது கடினம். என்னால் முடிந்த  வரை முயல்கிறேன். 

        தீபாவளித் திருநாளில் சந்தோஷம் நிறையட்டும், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிப் பொங்கட்டும். உங்களது மகிழ்ச்சி அடுத்தவர்களின் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.  சந்தோஷமான மற்றும் பாதுகாப்பான தீபாவளி அமைய எனது வாழ்த்துக்கள்.

உதவும் உள்ளங்கள் 
60/34, சவுத் உஸ்மான் ரோடு, 
நதேள்ள ஜெவேல்லேரி க்கு அருகில்,
சென்னை, இந்தியா - 600017

Udhavum Ullangal
60/34, South Usman Road, 
Next to Nathella Jewellery, 
Chennai, India 600017

இனைய தளம்: http://www.udhavumullangal.org.in
[ மேலும் படிக்க ]

தீபாவளி ஒரு சிந்தனை




நண்பர்களே தீபாவளி நெருங்கி விட்டது.இந்த நேரத்தில் இந்தப் பதிவை வெளியிடுவது தான் உசிதமென்று கருதுகிறேன்.இதை விடுமுறை தினச் சிறப்புப் பதிவு என்று கூட வைத்துக் கொள்ளலாம்(சில பகுத்தறிவு ஊடகங்கள் சமீபகாலமாக அப்படித்தான் விளம்பரப் படுத்துகின்றன).

தீபாவளி என்றாலே இயல்பாகவே அனைவர் மனத்திலும் ஒருவித குதூகலம் குடி கொண்டு விடுகிறது.புத்தாடைகள், பலகாரங்கள்,புதிய திரைப்படங்கள்,'பட்டாசுகள்' என நாடே அமர்க்களப்பட்டுவிடுகிறது.ஆனால் ஒரு விஷயம். தீபாவளியப் பற்றிய நமது புரிதல் சரி தானா?நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற தினத்தையே தீபாவளி என்று இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.இந்தப் பண்டிகையன்று வீடு முழுக்க விளக்கேற்றிக் கொண்டாடுவது மரபு. தீபாவளி அன்று நம் காது கிழியும் அளவுச் சத்தங்கள் கேட்கும்.யானை வெடி,பிஜிலி பட்டாசு,செவென் ஷாட்,டபுள் ஷாட்,ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா சரங்கள்,ராக்கெட்டுகள் என பல விதப் பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாடுகிறார்கள். இரவு நேரங்களில் சங்கு சக்கரம்,புஸ் வானம்,மத்தாப்புக்கள் என வெளிச்சம் தரும் பட்டாசுகள் வெடிக்கப் படுகின்றன.

ஆனால் பட்டாசு வெடித்தே இந்தப் பண்டிகைக் கொண்டாட வேண்டுமென்பதில்லை.இந்த தீபாவளி என்பது என்ன? 
தீபஒளி.தீபம் + ஒளி = தீபாவளி.ஆக,இதை விளக்குத் திருவிழா என்று பொருள் கொள்ளலாம்.ஆனால்,இன்று நாட்டில் இதை சப்தங்களின் திருவிழாவாகத் தான் கொண்டாடுகிறார்களே தவிர,விளக்குத் திருவிழாவாக கொண்டாடுவதில்லை. குடிசை நிறைந்த பகுதிகளில் விடப்படும் ராக்கெட்டுகளால் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. டிரான்ஸ்போர்மேர்களில் இந்தப் பட்டாசுகள் பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது.திரியைக் கில்லி பட்டாசு கொளுத்தி விட்டு வரும் சிறுவர்கள்,இளைஞர்கள் அதே கையுடன்(கை கழுவாமல்) பலகாரம் சாப்பிடுகிறார்கள்(அனைவரும் இப்படிச் செய்வதில்லை என்றாலும்,ஒரு சிலர் இதைச் செய்கிறார்கள்).இதனால் பல விதமான வியாதிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது.

சரி.இந்தப் பட்டாசுத் தான் எங்கிருந்து வருகின்றது?இதைத் தயாரிப்பவர்கள் தான் யார்?கீழே உள்ளப் படத்தைப் பாருங்கள்.இந்தப் பட்டாசுகள் சிவகாசியிலிருந்துத் தயாராகின்றன.சீருடை அணிந்துப் பள்ளிக்குச் சென்று புத்தகத்தையும் எழுதுகோலையும் பிடிக்க வேண்டிய கைகள் வெடிமருந்தைப் பிடித்துள்ளன.இந்தச் சிறுவர்களின் எதிர்காலத்தை இருளாக்கித் தான் ஒளி வீசும் இந்த மத்தாப்புக்கள் செய்யப்படுகின்றன.

இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என்னவென்றால் வறுமையில் வாடும் இந்த சிறுவர்களுக்குக் கல்வியப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில சமூக சேவை புரியும் இயக்கங்களைக் கொண்டு இதைச் செய்யலாம். இது போல சிறுவர்களை பணிக்கமர்த்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வழி செய்யலாம்.ஆனால் இவை அனைத்துக்கும் சரியான திட்டமிடுதல் வேண்டும் மற்றும் இதைச் செயல்படுத்த அவகாசமும் வேண்டும்.நம்மளவில் உடனடியாக என்ன செய்ய இயலும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

நான் முன்பு குறிப்பிட்டதைப் போல இது தீபங்களின் பண்டிகை தான்.சப்தத்தின் பண்டிகை அல்ல.இது போல பல சிறுவர்களின் வாழ்வை அழித்து செய்யப்படும் பட்டாசுக்களை நாம் பணம் கொடுத்து வாங்கி வெடிக்கத்தான் வேண்டுமா? இந்த வெடிச் சத்தங்கள் இதய நோயாளிகளின் உயிருக்கே உலை வைக்கும் திறன் கொண்டவை. பலவித ஆபத்துகளையும் விளைவிக்கவல்ல இந்த வெடிகளையும் மத்தாப்புக்களையும் நாம் கொளுத்தத் தான் வேண்டுமா?சிந்தியுங்கள் தோழர்களே.



இப்படிப் பட்டாசுகளுக்கெதிராக நான் எழுதுவதால் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்றோ அல்லது இந்து மதம் மீது துவேஷம் கொண்டவன் என்றோ கருத வேண்டாம்.எனது மற்றொரு வலைப்பூவான(http://dream---life.blogspot.com) ஐ தொடர்ந்துப் படித்தவர்கள்/படிப்பவர்கள் அவ்வாறு கருத வாய்ப்பில்லை. நான் ஒன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறிவைத்து இப்படியெல்லாம் எழுதவில்லை.இந்த வலைப்பூவைப் படிப்பவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களாகத் தான் இருக்க முடியும்.இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானோர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான். இன்றும் பலர் பட்டாசு வெடிப்பதில் ஏக ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர், இந்தப் பதிவைப் படித்தப் பிறகு இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் கூட அது நமக்கொரு வெற்றி தான். 

நான் ஒருவன் இதை எழுதுவதால் தமிழகத்தில் உள்ள அனைவரும் பட்டாசுக்களைப் புறக்கணித்துவிடப் போவதில்லை. ஆனால் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்.நாம் ஏன் அந்த ஆரம்பமாக இருக்கக் கூடாது?இதன் காரணமாகவே நான் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிப்பதில்லை. சிந்தியுங்கள்.....

தீபஒளித் திருநாள் அன்று இல்லங்களில் தீபம் ஏற்றுவோம்.நம் வாழ்விளிருக்கும் இருள் விலகி ஒளிமயமான எதிர்காலம் அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துக்கள்!!!!!

[ மேலும் படிக்க ]

கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை


கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சமீபத்தில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்தி அதில் "ஓரளவு" வெற்றியும் கண்டு விட்டார்கள்.சமீப காலமாக உண்ணாவிரதம் இருப்பது ஒரு விதமான வாடிக்கை ஆகி விட்டது.சில சமயங்களில் அது வேடிக்கையாக காட்சி அளிக்கிறது.இந்த வாடிக்கை வேடிக்கைகளைப் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.இந்த கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதில் என்ன பிரச்சினை?

1988ஆம் ஆண்டு இந்திய அரசும் ரஷிய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.ஆனால் திடீரென கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த அணு மின் நிலையத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது.அரசியல் கட்சிகள் தம் பங்கிற்கு அப்பகுதி மக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து அவர்களின் போராட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.

இத்தனை நாள் இல்லாத எதிர்ப்பு இப்போது எழுவதற்கு காரணம் என்ன? ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி மக்களை வெகுவாக பாதித்து விட்டதென்றும் அதன் விளைவாகவே இந்த போராட்டங்களும் எதிர்ப்புகளும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர விளைவுகள் நம் மக்களிடையே இப்படி ஒரு பயத்தை உண்டாக்குவது இயல்பு தான்.ஒரு வேளை இங்கும் அது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி எழுவது புரிந்து கொள்ளக் கூடியதே.ஆனால் ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. காரணம் அந்நாட்டின் புவியல் ரீதியான அமைப்பு அப்படி.இங்கு அப்படி இல்லை.

விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் இதனால் பாதிப்பேதும் ஏற்படாது என்று தான் கூறுகிறார்கள்.2001 ஆம் ஆண்டே இந்த அணு மின் நிலையத்தைக் கட்டும் பணிகள் துவங்கி விட்டன.இந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு போராட்டங்களும் எதிர்ப்புகளும் பணிகள் முடிவடையும் நிலையில் கிளம்பி இருப்பது வியப்பாகத் தான் இருக்கிறது. தமிழகம் ஏற்கனவே மின்சார பற்றாக் குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.நானறிந்தவரையில் எந்த ஒரு தேர்தலிலும் மின் வெட்டும் மின்சார தட்டுப்பாடும் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மின் வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்பட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என்ற உறுதிமொழியோடு தான் இந்த அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது.இவர்கள் வந்தால் ஆக்கப்பூர்வமான சில திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று எண்ணி ஒட்டு போட்ட மக்களும் உண்டு. 

இது வரையில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த அரசு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எப்போதோ துவங்கிய இந்த அணு மின் நிலையத்தின் பணிகள் சரியாக இப்போது முடிவடையும் நிலையில் உள்ளன.அதையும் நிறுத்த வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆயற்று.நமது மாண்புமிகு முதல்வர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் நோக்கம் உண்மையில் நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் இதே முதல்வர் அவர்கள் தான் சற்று தினங்களுக்கு முன்பு அணு சக்தி விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதாகவும் இந்த அணு மின் நிலையம் சகல பாதுகாப்புகளுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.மேலும் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை எனவும் கூறினார்.அப்படிப்பட்டவர் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது சுத்த அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு வேளை எதிர் கட்சிகளின் வாயை அடைக்க இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றினாரோ என்னவோ.

எதிர்கட்சிகளை அடக்குவதர்காகவா ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு தனிக்குழு அமைத்து இந்த அணு மின் நிலையம் சரியான பாதுகாப்பு வரம்பிற்குள் அமைக்கப்பட்டிருக்கிறதா?இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்படுமே ஆனால் அது எந்த அளவில் இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அந்தக் குழுவிற்கு ஆணை இட்டிருக்க வேண்டும்.அந்த அறிக்கையை பொறுத்தே அணு மின் நிலையம் அமையும் என்றும் மக்களுக்கு பதிப்பு ஏற்படும் எந்த ஒரு காரியத்தையும் அரசு செய்யது என்றும் உறுதி அளித்திருந்தால் இந்த உண்ணாவிரதம்,போராட்டம் எல்லாம் நின்றிருக்கும்.அணு மின் நிலையம் அமைப்பதனால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது என்று அறிக்கை வந்தால் அணு மின் நிலையத்தை செயல்படுவதில் எந்தத் தடையும் இருக்க கூடாது.

அரசு இதைச் செய்யாமல்,குறை கூறுபவர்களை திருப்தி படுத்தும் நோக்கோடு செயல் பட்டிருப்பது ஆட்சேபத்திற்குரியது!!


[ மேலும் படிக்க ]

தரிசனம்

வீதி உலாவில் இது என் முதல் உலா.உங்கள் அனைவரையும் சந்திக்கும் பயணத்தை இங்கே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பயணம் எனதாக மட்டும் இல்லாமல் நமதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்கள் கருத்துக்களும் பங்கேற்ப்பும் மிக முக்கிய அம்சமாக விளங்கினால் மட்டுமே இந்த முயற்சி முழுமை அடையும். நானும், நண்பர் ஹரிஷும் மற்றும் விரைவில் எங்களுடன் இந்த உலாவில் இணையப் போகும் பதிவர்களின் சார்பாக உங்கள் ஆதரவையும், ஊக்குவிப்பையும் வேண்டி பதிவை தொடங்குகிறேன்.

முதல் பதிவாக என்ன எழுதலாம் என்று யோசித்த போது ஏதேனும் ஆன்மிகம் சம்பந்தமாக பதிவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.(குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும்,கண்டிப்புகளுக்கும் இன்னும் நிறைய காலமும் வாய்ப்பும் இருக்கிறது அல்லவா? :) )..அந்த சமயத்தில் நான் சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றது ஞாபகம் வந்தது.அதை பற்றியே எழுதினால் என்ன என்ற கேள்வியின் விளைவே இந்த பதிவு..
ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் எவ்வளவு பிரசித்தி பெற்றது என்று தெரியாது. இருந்தும் அதை பற்றி எழுத நான் நினைத்தது அந்த கோவிலுடன் தொடர்புடைய நம்பிக்கைகளும், அதை பற்றி சொல்லப்படும் சுவாரஸ்யமான தகவல்களும்,அந்த கோவிலின் சமீபமே ஏற்படுத்தும் தாக்கமும்,அமைதியுமே முக்கிய காரணிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

(மேலே கூரை இல்லாமல் வெட்ட வெளியில் கோவில் அமைந்துள்ளதை இந்த படத்தில் காணலாம் )

வாகனத்தை விட்டு இறங்கியதுமே எனக்கு வியப்பு காத்திருந்தது. கோவில் என்றாலே விண்ணை அளக்கும் கோபுரமும்,பரந்த மண்டபகங்களும் தான் என்றே பார்த்த என் கண்  முன்னே மேற்கூரையே இல்லாமல் திறந்த வெளியில் பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு  இருந்தார் ஆஞ்சநேயர்.ஏழு மலைகளுக்கு அப்பாலும்,காடுகளுக்கு அப்பாலும் எளிதில் தரிசனம கொடுக்காமல் பிகு பண்ணும் கடவுள்களுக்கு மத்தியில் ஆரவாரமே இல்லாமல் இந்த ஆஞ்சநேயர் இருப்பது முதலில் என்னை கவர்ந்தது.

அந்த கோவிலின் சக்தியையும்,மகிமையும் கேட்டபோது  அப்படியே கொஞ்சம் ஏன் இப்படி கோவில் கட்டபடாமல் இருக்கிறது   என்று விசாரித்தேன் அங்கே இன்னும் பல சுவாரஸ்யங்கள்.ஆஞ்சநேயர் கோவிலுக்கு கர்ப்பகிரகம் கட்ட முயற்சிக்கும் போதெல்லாம் எதாவது அசம்பாவிதம்,தடங்கல் நடக்குமாம். மேலும் ஆஞ்சநேயரே கோவில் கட்ட நினைத்த  யாரோ ஒருவர் கனவில் தோன்றி தனக்கு கோவில் கட்ட வேண்டாம் என்று கூறியதாக ஐதீகம்.உலகையே காக்கும் தன்னை ஒரு சிறு கோவிலுக்குள் அடக்கிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தார் போலும்.
(உக்ர ஆஞ்சநேயர் சந்நிதி )
பொதுவாக சிலைகள் இரண்டு வகையான பரிமாணங்களில் காட்சி  அளிக்கும். ஒன்று சாந்த ரூபம், மற்றொன்று உக்ர ரூபம்.இங்கே வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருவுருவம் உக்ர சொரூபியாக காட்சிய அளிக்கிறது.பெயருக்கு ஏற்றார்போல் சனிக் கிழமைகளில் முழு அலங்காரத்தில் ஆஞ்சநேயரை பார்த்தல் சிலருக்கு பயபமே ஏற்படுமாம். முன்காலத்தில் தனியாக இந்த கோவிலை கடக்கவே மக்கள் பயபடுவார்களாம்.

9-10 அடியிலான ஒரே கல்லில் அழகிய நுண் வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த திருவுருவம் பழங்கால சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.இடது கையில் கதை,வலது கை ஆசிர்வதிக்கும் நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளன.நின்ற நிலையில் இடையில் ஒரு வாள்,தலைக்கு மேல் வரை சுற்றி நிற்கும் தன் வாலில் மணி,தலையில் அழகிய கிரீடம்,உக்ர சொரூபத்தை குறிக்கும் வகையில் வாயிலிருந்து நீண்ட பல் என்று கம்பீரமாக நிற்கிறார் இந்த ஆஞ்சநேயர்.
(கோவிலை சுற்றியுள்ள குன்றுகளில் ஒன்று )
கோவிலை சுற்றியுள்ள தொடர்ச்சியான சிறு குன்றுகளும் மரங்களும் எழில் கூட்டுகின்றன. இவற்றை எல்லாம் மீறி மற்றுமொரு கவனிக்கத்தக்க விஷயம் இந்த ஊரும், பகுதியும் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிமாக வாழும் இடம்.ராவுத்தநல்லூரில் உள்ள "ராவுத்த" என மருவிய ராவுத்தர் என்ற இஸ்லாமிய பெயரே அதற்கு சான்று கூறும்.தன் இளம்வயதில் சில வருடங்கள் இங்கு வசித்த என் தந்தையும் நான் வலிய கேட்டபோது இந்த பகுதியில் நிலவும் சமய ஒற்றுமையை ஊர்ஜிதம் செய்தார். மதத்தின் பேரில் வன்முறைகள் செய்யும் மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு விஷயம்  இருப்பது  ஆச்சர்யமாக இருந்தது.
(கோவிலில் உள்ள வெங்கடாசலபதியின் சிலை);
எல்லாவற்றுக்கும் மேலாக கோயில்,மசூதி என்ற வார்த்தைகள் ஒரே வாக்கியத்தில் வந்தாலே  பிரச்சனை என்கிற  நிலையில் மதபேதங்கள் பார்க்காமல் இங்கே குடிகொள்ள முடிவு செய்த ஆஞ்சநேயரை வணங்காமல், அந்த ஆலயத்தின் அமைந்த சிறப்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. ராமனை கொண்டு அரசியல் நடக்கும் காலத்தில் அந்த ராமனின் தூதனே இப்படி சமய ஒற்றுமையை வலியுறுத்தும் போது நாம் ஏன் வேற்றுமை இல்லாமல் வாழ கூடாது ?. சமயங்களை மனதிலே மட்டும் வைத்து கொண்டு செயலிலே வேற்றுமை காட்டமால் அன்பு என்ற ஒன்றை மட்டுமே அறமாக கொண்டு வாழ்வோம்.ஒரு வகையில் ஆஞ்சநேயன் படைப்பே ஒரு ஆத்மா மிருகமாக பிறந்தாலும் அன்பையும் அறத்தையும் தன் மார்க்கமாக கொண்டால் தெய்வ நிலைக்கு உயரலாம் என்று உலகிருக்கு அறிவுறுத்தவே என தோன்றுகிறது. அப்படி அன்போடும் அறத்தோடும் அனைவரும் வாழ ஆஞ்சநேயன் அருள் புரியட்டும் என்று வேண்டி இந்த பதிவை முடிக்கிறேன்.
(ஆஞ்சநேயர் படம் சமிபத்தில்)

நன்றி
-விஷ்ணு
[ மேலும் படிக்க ]

ஒரு அறிமுகம்


நண்பர்களே, பொது கருத்துக்களங்களின் முக்கிய நோக்கமே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது தான்.தாய்மொழியில் தான் ஒருவனுடைய சிந்தனைகள் இயல்பாக அமையும்.அதனால்,முழுக்க முழுக்க தமிழிலேயே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வலைப்பூவைத் தொடங்குகிறோம்.தொடங்குகிறோம் என்றால் பன்மை ஆயிற்றே?ஆம்,இந்த தளத்தில் எழுத என் நண்பர்கள் சிலரும் சம்மதித்துள்ளனர்.நாங்கள் எங்கள் கருத்துக்களை தனித்தனி தளங்களில் பதிந்து வருகிறோம்.இங்கு வெளியிடப்படும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்துக்களே. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.இது வாசகர்களுக்கும் பொருந்தும்.எங்களுடைய கருத்துக்களை வாசகர்கள் ஏற்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.இங்கு பதியப்படும் கருத்துக்களுக்கு வாசகர்கள் தங்களின் எதிர்ப்புகளை தாராளமாக காட்டலாம்.

நான் ,( http://dream---life.blogspot.com/ ) இந்த தளத்தில் எனது கருத்துக்களை பதிந்து வருகிறேன்.நண்பர் விஷ்ணுவர்த்தனன், (http://vishnu24.blogspot.com/) , இந்த தளத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பதிந்து வருகிறார்.இன்னும் இரண்டு நண்பர்களும் எழுதவிருக்கிறார்கள்.அதில் ஒருவர் பெண் எழுத்தாளர்.விரைவில் அவர்களைப் பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிடுகிறேன்.

சரியான இடைவெளியில் இங்கே பதிவுகள் பதியப்படுமேயானால், பலவிதமான பதிவுகளைக் காணலாம். ஆன்மிகம்,அரசியல்,சினிமா,கற்பனை என பலவிதமான பதிவுகளும் காணலாம்.

- ஹரிஷ். 

[ மேலும் படிக்க ]